Friday, August 12, 2005

கைக்குட்டை

கைக்குட்டை

உன்
வியர்வையில் குளித்ததை
அழுக்காக்கி விடாதே!!
துவைத்து...

கி.பிரேம்குமார்

இருட்டு

இருட்டு


என் செல்வமே...
வீட்டை விட்டு வந்தேனடி
விடிவு காண அன்று !
என் வாழ்க்கை விடிவதே
இரவில் தானடி !!

எவ்வாறு நெஞ்சில் ஈரமிருக்கும்
மனிதமிருகங்களுக்கு,
கொடுத்த பிறகு கொடுத்தார்கள்
உணவெனக்கு !

ஆம்!
என்னையே கொடுத்தபிறகு
கொடுத்தார்கள் உணவெனக்கு !!

நானும் ஒரு மனிதப்பிறவி தானடி
அந்த மரியாதை கூட எனக்கு
தர மறுப்பதேனடி !!

சந்தையிலே தீண்டத்தகாதவள் போல்
பொருளைத் தூக்கி எறிந்தானடி,
நேற்று என்னைத் தீண்டும் போது மட்டும்
அந்த எண்ணத்தைத் துறந்துவிட்டானடி !

என் இருட்டறையில் வளர்கின்ற
என் செல்வமே !
எந்த எழுத்தை இடுவேன் உன்
பெயருக்கு முன்னமே?
காந்தி நோட்டைப் பார்த்ததும்
நிம்மதியடைந்தேன்|
உன் அப்பன் பெயர் என்னவென்று
கேட்க மறந்தேன்.

நீ பிறப்பதற்கு முன்னமே
தெரிந்து கொண்டேன் செல்வமே !
நீயும் நானும் ஒன்றென்று.
நம் வாழ்வு இருட்டில்
தான் முடியுமென்று !!

பாவம் பெண்ணே நீ !
உனக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை
என் கருவறையில் உனக்குக்
கருமாதி நடக்குமென்று !!

மன்னித்துவிடு என் செல்வமே
வயிற்றை நான்
கழுவிக்கொள்கிறேன்.
இல்லையெனில்
என் வயிற்றைக் கழுவுவது கடினமடி.

நீ கொடுத்து வைத்தவள்
என் கண்ணே !
மூன்று மாதம் தானடி
உன் வாழ்வு இருட்டில்
வாழ்வே எனக்கு இருட்டில்தானடி !!

- பிரேம் குமார்.கி

ஊமையாய் நான்.....

ஊமையாய் நான்.....


தோட்டத்துல மல்லிப்பூ பூத்திருந்தும்
தொடுத்து வைக்க முடியலயே!
வாழத்தடையில பூ தொடுப்பாக பார்த்திருக்கேன்
உன் உசிருல தொடுத்ததேன்னு தெரியலையே!

புற்றுநோய் எனத் தெரிந்திருந்தும்
பொட்டு வச்சு போனவனே
வியர்வையில குளிக்கையில் தெரியாமல்
போனதய்யா
கண்ணீரில் நீ நீந்தவைப்பன்னு.

கல்யாணச் சிரிப்பு அடங்குமுன்னே
சந்திசிரிச்சி போனதய்யா என் வாழ்க்க
பந்திக்கு இல போடுமுன்னே
பந்தி முடிஞ்சதேன்னு புரியலையே!

மஞ்சக் கயத்தில என் வாழ்க்கையை
தூக்கிலிட்டுப் போனவனே!
உயிர் போன பின்பு ஒப்பாரி வச்சவுக,
நீ போன காரணம் தெரிஞ்சிருந்தும்
நான் வந்த நேரமுன்னு சொல்லி
உயிரோட எரிக்கிறாக என்னை.

முழுகாம நான் இருக்குமுன்னே
மூழ்கிப் போனதய்யா என் வாழ்க்கை
கல்யாணத்துக்கு கட்டின வாழையின்னும்
கருகலையே!
என் வாழ்க்கை பட்டுப்போனதேன்னு
தெரியலையே

கைக்குள்ள அடங்காத உன் உடம்பு
சட்டிக்குள்ள அடங்கிப்போன மர்மமென்ன?
ஏத்திவச்ச குத்துவிளக்கு அணையலையே!
கொள்ளிக்கட்டைக்கு நெருப்பானதேன்னு
புரியலையே

பொட்டு வாங்க வச்சிருந்த ஒத்த ரூபா
பொட்டாகிப் போனதடா உன் நெத்தியில
கட்டியிருந்த சேல முழுசா கசங்கலையே!
'கோடி' சேலைக்கு என்ன அவசரமுன்னு தெரியலையே!

என் வாழ்க்க சின்னாபின்னமானதடா
உன் மரணச் சின்னமாகிப் போனேனடா
நடமாடும் கல்லறையாகிப் போனதாலோ என்னவோ
சொல்ல முடியாமல் ஊமையாகிப் போனேனடா!

கி.பிரேம் குமார்