Friday, August 12, 2005

இருட்டு

இருட்டு


என் செல்வமே...
வீட்டை விட்டு வந்தேனடி
விடிவு காண அன்று !
என் வாழ்க்கை விடிவதே
இரவில் தானடி !!

எவ்வாறு நெஞ்சில் ஈரமிருக்கும்
மனிதமிருகங்களுக்கு,
கொடுத்த பிறகு கொடுத்தார்கள்
உணவெனக்கு !

ஆம்!
என்னையே கொடுத்தபிறகு
கொடுத்தார்கள் உணவெனக்கு !!

நானும் ஒரு மனிதப்பிறவி தானடி
அந்த மரியாதை கூட எனக்கு
தர மறுப்பதேனடி !!

சந்தையிலே தீண்டத்தகாதவள் போல்
பொருளைத் தூக்கி எறிந்தானடி,
நேற்று என்னைத் தீண்டும் போது மட்டும்
அந்த எண்ணத்தைத் துறந்துவிட்டானடி !

என் இருட்டறையில் வளர்கின்ற
என் செல்வமே !
எந்த எழுத்தை இடுவேன் உன்
பெயருக்கு முன்னமே?
காந்தி நோட்டைப் பார்த்ததும்
நிம்மதியடைந்தேன்|
உன் அப்பன் பெயர் என்னவென்று
கேட்க மறந்தேன்.

நீ பிறப்பதற்கு முன்னமே
தெரிந்து கொண்டேன் செல்வமே !
நீயும் நானும் ஒன்றென்று.
நம் வாழ்வு இருட்டில்
தான் முடியுமென்று !!

பாவம் பெண்ணே நீ !
உனக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை
என் கருவறையில் உனக்குக்
கருமாதி நடக்குமென்று !!

மன்னித்துவிடு என் செல்வமே
வயிற்றை நான்
கழுவிக்கொள்கிறேன்.
இல்லையெனில்
என் வயிற்றைக் கழுவுவது கடினமடி.

நீ கொடுத்து வைத்தவள்
என் கண்ணே !
மூன்று மாதம் தானடி
உன் வாழ்வு இருட்டில்
வாழ்வே எனக்கு இருட்டில்தானடி !!

- பிரேம் குமார்.கி

1 Comments:

Blogger செல்வேந்திரன் said...

மிக அருமை ! பிரேம் !!

11:21 AM  

Post a Comment

<< Home